Wednesday, November 4, 2020

I know swimming da

ஓர் ஏரியின் கரை அருகில் நின்று கொண்டு  இருக்கிறேன். பேச்சு வாக்கில் என் அருகில் பேசிக் கொண்டு இருந்தவர், வேகமாக ஏரியில் விளையாட்டாக என்னைத் தள்ளி விடுகிறார்.  நீரில் மூழ்குகிறேன்.

"என்ன மாமா இப்படி ஆகி விட்டது?. சரி பத்திரமாக செல்லுங்கள்" என்று மகிழ்வுடன் கை அசைத்துவழி அனுப்புகையில் தான் முகம் பார்க்கிறேன். அவர் என் அக்காவின் மூத்த மகன்.

மெய் போன்ற அந்த கனவில் இருந்து விழிக்கிறேன். நேரம் பார்க்கிறேன். காலை 5 மணி. இந்த கனவு  நடப்பதற்கு சாத்தியங்கள் அதிகம் என்பதை உணர்ந்தேன். 

2 காரணங்கள்

1. எனக்கு நீச்சல் தெரியாது(அன்று)

2. இதை செய்யும் முழு ஆற்றலும் திறமையும் பிறப்பிலேயே என் அக்கா மகனுக்கு உண்டு என்ற அசாத்திய நம்பிக்கை.

உடனே இணையத்தில் தேடி, 6 மணிக்கு, அருகில் உள்ள நீச்சல் பயிற்சி நிலையம் சென்று சேர்ந்து விட்டேன்.

15 நாள்கள் பயிற்சியில்  ஓரளவு நீந்தக் கற்றுக் கொண்டு ஆயிற்று. ஆனால் ஒரே ஐயம்- அந்த நீச்சல் குலத்தின் ஆழம் 5 1/2 அடி மட்டுமே. அதனால் முழு நம்பிக்கை வரவில்லை.  அந்த பயிற்சியாளரிடம் கேட்ட பொழுது - "நீங்க நீந்துவதைத் தான் பார்க்கிறேனே. அருமையாக நீந்துகிறீர்கள். நீங்க எல்லாம் கடலிலேயே நீந்தலாம். அந்த அளவுக்கு தயாராகி விட்டீர்கள். ஊரில் கிணற்றில் எல்லாம் குதித்து பாருங்கள். சுலபமாக இருக்கும்" என்றார்.



^இதைப் போன்று என்னை நானே தோளில் தட்டிக் கொண்டு வந்து விட்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன், நண்பர் கார்த்தி நீச்சல் கற்றுக் கொண்ட பிறகு, ஏதேச்சையாக கடற்கரை செல்லலாம் என்று கூறி 

- "அந்த பெரிய அலை வருது பாரு. நீ அங்க விழுந்தா கூட உன்னை காப்பற்றி விடுவேன். ஏன்னா எனக்கு தான் இப்போ நீச்சல் தெரியுமே.. "

 " அங்க தெரியுது பாரு படகு. நீ அங்க விழுந்தா கூட உன்னை காப்பற்றி விடுவேன். ஏன்னா எனக்கு தான் இப்போ நீச்சல் தெரியுமே.. 


"சக்திமான், என்னைக் காப்பாற்று"- என்று குழந்தைகள் கத்தினால் சக்திமான் வந்து காப்பாற்றுவாறே அது போல -"நீச்சல் வீரர் கார்த்தி, என்னை காப்பாறுங்கள்" என்று கத்தினால் போதும் - உடனே வந்து காப்பாற்றி விடுவேன்.  " என்பது போல் எல்லாம் பேசி என்னை வெறுப்பேற்றி இருந்தார். 

அன்று முடிவு செய்தேன். நாம் நீச்சல் கற்றுக் கொண்டாலும் இது போல யாரையும் வெறுப்பேற்றக் கூடாது என்று.

சில நாள்கள் கழித்து, நண்பர் குபேந்திரன் ஊரான பெரியகுளம் சென்றேன்.

"கல்லாறு செல்வோம். அனால் ஆழம் அதிகம்.. கொஞ்சம் பார்த்து தான் இருக்க வேண்டும் என்று கூறினார்."

"Hey. I know swimming da" என்று கனவு கண்டது முதல் 5 1/2 அடி நீச்சல் குளத்தில் கற்றது வரை கூறிக் கொண்டே வந்தேன். 



அருமையான நீர் வீழ்ச்சி.  ஆழம் அதிகமாக இருந்தது. 

குபேந்திரன் : "முதலில் நான் குதித்து ஆழம் பார்த்து சொல்கிறேன். நீங்கள் பிறகு குதியுங்கள்" என்றார்

"Hey. I know swimming da" என்று கூறி குதித்தேன். ஆழம் கொஞ்சமா தான் இருக்கு. நீ குதி." என்று கூறி ஒரு பக்கமாக நீந்தி சென்றேன்.



நன்கு நீந்தி சென்று ஒரு பாறை  இருந்தது. அதன் மீது அமரலாம் என்று அப்பக்கம் நீந்தி சென்று அந்த பாறையைத் தொட்டால், அந்த பாறை முழுதும் பாசி படிந்து வழுக்கியது பிடிக்கவே இயலவில்லை .சற்று தூரத்தில் சில செடிகள் போல இருந்தன. அதைப் பிடிக்கலாம் என்று சென்றேன். அவை முட்செடிகள். "சத்திய சோதனை" என்று நினைத்துக் கொண்டேன்.

சரி திரும்ப வந்த இடத்திற்கே சென்று விடுவோம் என்று நீந்தி வருகிறேன். அதற்கு மேல் நீந்த முடியவில்லை. 

நான் இருந்த திசையின் எதிர் திசையில் குபேந்திரன் ஒரு பாறை மீது அமர்ந்து இருந்தார்.  "தம்பி, தம்பி" என்று தத்தளித்து கை அசைக்கிறேன்.

"சும்மா விளயாதீங்க. I know - You know swimming" என்கிறார். 

மேலே நான்கு பதின்ம வயதில் இருந்தவர்களில் ஒருவர் குதித்து என் அருகில் வந்தார்.

"அவர் சும்மா விளையாடறார். கிட்ட போனா அமுக்கிடுவார். போகாதே" என்று தடுக்கிறார் குபேந்திரன். 

"வாங்க ண்ணே .. கையப் பிடிங்க" என்று சொல்லி மீண்டும் அதே வழுக்குப் பாறை அருகில் அழைத்து செல்கிறார். 

'அந்த பக்கம் வேண்டாம்" என்று நான் சொல்ல வந்ததைக் கேட்காமல் "பயப்படாதீங்க.. நான் தான் இருக்கேன் ல" என்று  அதே வழுக்கு பாறையில் கை யைப் பிடிக்க முடியாமல் என்னை விட்டு விட்டு வேறொரு நபரை அழைத்தார். 

இன்னொருவர் நீந்தி வர கொஞ்சம் முழுக ஆரம்பித்து விட்டேன். அதற்குள் அந்த வேறு நபர் வந்து கையைப் பற்றி இழுத்து செல்கிறார்.

"உயிர் பிழைத்து விட்டோம்" என்று தெரிந்து உயிரைக் காப்பாற்றியவரின் முகத்தைப் பார்க்கலாம் என்று நீருக்குள்ளே இருந்து எட்டிப் பார்த்து மீண்டும் தலையை குனிந்து கொண்டேன். 

காரணம் - அந்த பையன் மேல் இருந்து குதிக்கும் பொழுது கட்டி இருந்த ஒரே துண்டும் காற்றில் பறந்து போய் விட்டது. தன் மானத்தையும் பொருட்படுத்தாமல் நம் உயிரைக் காப்பாற்றி உள்ளான் என்று எண்ணினாலும் தலை நிமிர முடியாத சூழல்.  

 பாறைக்கு அருகில் இழுத்து வந்து விட்டார். அமைதியாக பாறை மீது அமர்ந்தேன். "ஒன்னும் இல்லை ண்ணே.. காலை கொஞ்சம் மேல தூக்கி அடிச்சி இருந்தீங்கன்னா வந்துட்டு இருப்பீங்க" என்று "அப்படியே" எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தார். இன்னும் தலை நிமிர முடியாமல் தான் அமர்ந்து இருக்கிறேன். "நீந்தி வர முடியலைன்னு வருத்தப் பட்டு தலை குனிந்து அமர்ந்து இருக்கிறார் போல.." என்று அவர் நண்பர்களிடம் கூறினார். எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

"அந்த துண்டை தூக்கிப் போடுய்யா" என்று அப்படியே சாவகாசமாக நண்பர்களைக் கேட்டார். "அங்குட்டு வந்து வாங்கிக்கய்யா.. நல்லா காத்தோட்டாம வா.. இங்கனக்குள்ள யாரு இருக்கா?" என்று அதை விட சாவகாசமாக அவரது நண்பர்கள் நடந்து செல்ல, என் அருகில் நின்று கொண்டு - "வரேன்ண்ணே" என்றார். 

"நன்றி தம்பி" என்று  குனிந்து கொண்டே சொன்னேன்.

அருகில் அமர்ந்து இருந்த குபேந்திரன் - "நன்றியும் மன்னிப்பும் கண்ணைப் பார்த்து சொல்லணும் மாமா" என்று கண் சிமிட்டிக் கொண்டே.

முறைத்தேன்.


"புரியுது. உங்க திட்டம் புரிந்து விட்டது. ஆழம் குறைவா இருக்குன்னு வருத்தப் படுறீங்க... அப்படியே மேல நடந்து போனால் 50 அடி ஆழத்துல நீந்தலாம் யாரும் இருக்க மாட்டங்க- ஏன்னா - you know swimming ல?" என்றார்.

Friday, July 17, 2020

பெயர் சொல்லும் பிள்ளை

இப்பொழுது எல்லாம் விதம் விதமாக குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப் பார்க்கிறோம்.

நான் கேட்ட, கேள்விப்பட்ட சில பெயர்களையும் அவற்றின் காரணங்களையும் எடுத்து உரைக்கிறேன்.

நன்றி மறவாமை:

நண்பரின் பெயர் மார்ஷல். ஏன் இந்த பெயர் என்றால் அவருடைய அப்பாவின் முதல் முதலாளியின் பெயர். இவருக்கு பொருள் உதவி எல்லாம் செய்து, வழிகாட்டி, கடன் தந்து முன்னேற்றம் அடைய உதவி உள்ளார். நல்லது.


இதற்கு இன்னொரு நண்பர் கேட்டார் - "நல்ல வேலை. உங்க அப்பா வங்கியிலோ / நிதி நிறுவனத்திலோ கடன் பெற்று உன்னை வளர்த்து இருந்தால், "கனரா வங்கி, வெங்கடாசலம் பைனான்சு கம்பனி என்று உனக்கு பெயர் வைத்து இருப்பாரோ" .


பொறாமை தவறு

நண்பரின் மகள் பெயர் பத்மஸ்ரீ. ஏன் இந்த பெயர் என்று கேட்டேன்.
"எல்லாம் இந்த கமல் மேல் இருக்கும் பொறமை தான்" என்றார். "எந்த கமல்?" என்றேன். "நடிகர் கமல் தான். எதற்கு எடுத்தாலும் பத்மஸ்ரீ கமல்ஹாசன், பத்மஸ்ரீ கமல்ஹாசன் என்று சொல்கிறார்கள். இப்பொழுது, பள்ளியில் என் மகளை "சஞ்சய் ராமசாமி " என்பது போல என் பெயரை சேர்த்தால் - "பத்மஸ்ரீ சண்முக சுந்தரம்" என்று அழைக்க வேண்டும். அப்படி அழைக்கப்படும் பொழுது நான் அந்த விருதைப் பெற்றது போலவே உணர்கிறேன் என்றார். "நான் உன்னிடம் பேசுவது சேது படம் இறுதிக் காட்சி பார்ப்பது போலவே உள்ளது" என்று கூறி விடை பெற்றேன்.


பிரேமம்

"எனக்கு ஏன் பா ஹரிணி-ன்னு பேர் வச்சீங்க"- என்று கண்ணீர் விட்டு கேட்ட "பாய்ஸ்" ஜெனிலியா நமக்கு பழக்கப்பட்டது தான்.
ஆனால் அதிலும் ஒரு புது முயற்சி. நண்பனின் மகன் பெயர் - "ஸ்ரீ செல்வ முத்து குமரன்".


2 காரணங்கள் சொன்னார்

1. சோதிடர்கள் கண்டிப்பாக 4 பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறி விட்டனராம்.

2. எல்லா பழைய காதலிகள் பெயரையும் இணைத்து வைத்த பெயர்.

பள்ளி - ஸ்ரீ திவ்யா
கல்லூரி(முதல் இரண்டு ஆண்டுகள்) - தமிழ்செல்வி
கல்லூரி(அடுத்த இரண்டு ஆண்டுகள்) - முத்தழகு
பணியிடம் - நிவேதா

"முதல் மூன்றும் சரி. நிவேதாவுக்கு பதில் ஏன் "குமரன்" என்று வைத்தாய்" என்று கேட்டேன்.

அந்த முதல் மூன்று பெண்களும் என்னை நிராகரித்து விட்டனர். நிவேதா என் காதலை ஏற்றுக் கொண்டார். ஆனால், அவர் தந்தை அதை மறுத்து விட்டார். அதன் காரணமாக தான் அவர் தந்தை பெயர் -"குமரன்". அதை சேர்த்துக் கொண்டேன். என் மகன் மீது கோபம் வரும் பொழுது எல்லாம் "குமரன்" என்று அழைத்து திட்டி மகிழ்வேன் என்றார்.  இன்னும் சில விடுபட்ட பெயர்களை அடுத்த குழந்தைக்கு வைக்க திட்டமிட்டு உள்ளார்.

தலைவா


தலைவர்கள் பெயரை சூட்டுதல்

தயவு செய்து இந்த பெயர்களைத் எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கவும்.
o   விவேகானந்தன்.
o   இந்திரா காந்தி  
o   ஜவஹர்லால் நேரு   
o   கட்டபொம்மன் ('மஜா' படத்திலேயே இதற்கான காரணம் தெளிவாக உண்டு)

   குழந்தைகள் தன் தவறுக்கு/ சேட்டைக்கு அடியோ திட்டோ வாங்குவது மட்டும் அல்லாமல் பெயருக்கு இரண்டு / மூன்று அடி சேர்த்து விழும். பிள்ளைகள் நலன் கருதி அவ்வாறு செய்யது இருத்தல் நலம்.


·        தொட்டில் பழக்கம்

·       நண்பர் ஒருவர். "அறம்" என்ற சொல்லுக்கு பொருள் அவர் என்பது போன்ற வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர். அவருக்கு ஒரே ஒரு கெட்ட பழக்கம். தமிழில் "ஓ" என்று துவங்கும் கெட்ட சொல்லை உயிர்வளியை(ஆக்சிஜென்) போல பயன்படுத்துவார். அவரை அனைவரும் "ஓ__" கிஷோர் என்று அன்புடன் அழைப்பர்.



·      "இப்படி இந்த சொல்லை பயன்படுத்துகிறாயே. நாளை உன் குழந்தை உன்னை பார்த்து இந்த சொல்லை பயன்படுத்தாதா? " என்று கேட்டதற்கு.."எனக்கு சற்று கடினமாக தான் உள்ளது. ஆனால், அந்த சொல்லை பயன்படுத்தாமல் பேசினால் ஏதோ இலக்கணப் பிழையுடன் பேசியது போலவே உள்ளது. ஒரு நிறைவாகவே இல்லை. நான் அதற்கு ஒரு பெரிய திட்டம் வகுத்து உள்ளேன். குழந்தையின் பெயரே "ஓ__" என்று வைத்து விடுவது. பள்ளி ஆசிரியர் முதல் தலைமை ஆசிரியர் வரை அதை சொல்லி அழைக்கும் பொழுது அது இயல்பாகி விடும்." என்றார். பிறகு நான் மட்டும் அந்த சொல் பயன்படுத்துவது தவறு என்றாகி விடாது அல்லவா?" என்றார்.


சிவனும் சக்தியும்


புதுமை - தாயின் முதல் எழுத்து + தந்தையின் முதல் எழுத்து.

நண்பர் பெயர் - ராகேஷ். அவரின் மனைவி பெயர் : தீபா.

அவரின் குழந்தை பெயர் : தீரா - இது மட்டும் அன்றி பள்ளியில் முதலெழுத்து குறியுடன்(initials) சேர்த்து பெயர் பதிவு செய்யும் பொழுது 
தீ.ரா. தீரா. 

"எப்படி என் பொண்ணு பெயர்? ஒவ்வொரு முறை சொல்லும் பொழுதும் எதிரொலிக்கிறது பார்த்தாயா? நாளை உலகம் முழுதும் எதிரொலிக்கும்" என்றார். ஆங்கிலத்திலும் D.R. என்று துவங்கும். மருத்துவர் ஆவதற்கு முன்பே. "Dr". நாளை என் மகள் மருத்துவர் ஆனால் ஆங்கிலத்திலும் எதிரொலிக்கும். 
"Dr.D.R.". 

எப்படி ?" என்றார்.  


சரி நண்பா.. ஒரு வேளை, உன் பெயர் சந்திரன் என்று இருந்து, மனைவி பெயர் - நிவேதா என்று இருந்து இருந்தால் - "சனி" என்று வைத்து இருப்பாயா? " என்று கேட்ட பொழுது , பதில் அளிக்காமல் facebook திறந்து என் நட்பை ரத்து செய்து விட்டு கிளம்பினார்.


நல்ல தமிழில் பெயர் வைக்க : peyar.in

Saturday, October 5, 2019

உண்மையான ராட்சசன் யார்?

ராட்சசன் - ஒரு பெரிய வெற்றிப் படம். அதில் ஐயம் ஏதும் இல்லை. அனால், யார் உண்மையான ராட்சசன்?




படம் வெளியாகி ஒரு வாரம் ஆகி இருந்தது. இரவுக் காட்சி, ரோகினி திரையரங்கம்.

எப்பொழுதுமே படம் துவங்குவதற்கு 5 நிமிடம் முன்பாகவே சென்று அமர்ந்து விடுவது வழக்கம்.

என் அருகில் ஒருவர் அமர்ந்து இருந்தார். அலைகளும் என் வாயும் ஒன்று என்பதால் அன்றும் ஓயவில்லை. அருகில் அமர்ந்தவரிடம் பேசுவோமே என்று "படம் செமையா இருக்காம் தல.  முண்டாசுப்பட்டி படத்தோட  director." என்று கூறினேன்.

"அவர் கேட்டாரா?" என்று நீங்கள் கேட்கலாம். கேட்கவில்லை தான். ஆனாலும் நான் அது போல பேசாமல் இருந்து இருந்தால் தான் ஆச்சர்யம்.


அருகில் இருந்தவர் :  "ஆமாம் பா. படம் ரொம்பவே நல்லா இருக்கு. அஞ்சாவது நாளா தொடர்ந்து night show வந்துன்னு இருக்கேன்.  8 மணிக்கு  போயி சரக்கு வாங்கி வீட்ல வச்சிடுவேன்.நேரா இந்த படத்துக்கு வந்துடுறது.   பயமா இருக்குமா. அந்த பயத்துலயே நேரா வீட்டுக்கு போயி குடிச்சிட்டு படுத்துகிறது. சும்மா குடிக்கக் கூடாது ல? ஏதாவது காரணம் இருக்கணும் ல? director mass பண்ணி இருக்கார்" என்றார்

"அருமை ணா. இந்த மாதிரி படம் எல்லாம் ஜெயிச்சா தான் நல்ல படம் நெறைய வரும்" என்றேன்.

அதற்குள் அவர் அருகில் அமர்ந்து இருந்த அவர் நண்பருடன் பேச ஆரம்பித்தார்.


முதல் காட்சி ஆரம்பித்தது.

இருவர் ஓடி வரும் காட்சி. நாய் குரைக்கிறது.

அண்ணன் அன்புடன் தோளைத் தட்டி,  "அந்த பின்னாடி இருக்கிற cement block-ல ஒரு body இருக்கும் பாரேன்" என்றார்.


"சரி ணா.. சரி ணா. நான் பார்த்துகிறேன்" - என்றேன்.

"இல்லை, நீ அதப் பார்த்து பயந்துடக் கூடாது ல?" என்றார்


விஷ்ணு விஷால் தயாரிப்பாளரிடம் கதை சொல்லிக் கொண்டு இருப்பார்.

"இப்போ ஒத்துக்க மாட்டாங்க. அப்புறம் , police ஆகி அந்த case-ஐயே கதையா எடுப்பாப்ல. climax-ல director ஆயிடுவார்" என்று தலை அசைத்துக் கொண்டே கூறினார்.

காவல் நிலையக் காட்சி வந்தது. "இந்த  பொம்பள பஜாரி மாறி பேசுவா. கடைசியா ஒரு scene-ல இவள பூட்டிட்டு ஓடிடுவான்." என்றார்.

கொஞ்சம் ஒரு 40 கோணம் அவருக்கு எதிர் புறமாக உடலை சாய்த்து அவரை விட்டு விலக முயன்றேன்.

"பாட்டு வரும் பாரு தேவை இல்லாத." என்றார்.

முனீஸ்காந்தின் மகள், விஷ்ணு விஷால் உடன் பேசிக்கொண்டு இருக்கும் முதல் காட்சி.

அப்போது, காது அருகில் வந்து "இந்த பொண்ணு கூட செத்துரும். பாவம். காப்பத்த try பண்ணுவாங்க. முடியாது" என்று உச்சு கொட்டி முடித்தார்.

ஒரு மாதிரி அவரைப் பார்த்தேன்.


இடைவேளையில் வேறு எங்காவது இருக்கை காலியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்.

தோளைத் தட்டினார் அண்ணன் -  "இந்தா பா. tea. உனக்கும் சேர்த்து வாங்கினு வந்தேன்"  என்று தேனீர் வாங்கி வந்து தந்தார்.. But, அந்த tea எனக்கு புடிச்சி இருந்தது.

முதன் முதலில், அரங்கில்  மந்திரம் செய்யும் காட்சி ஏதோ பின்னூட்டத்தில் வருகிறது.

"இந்த சனியன் தான் எல்லாரயும் சாவடிக்கும்.  ஆனா, அது பொம்பளையே இல்லை. பையன். செனியன் புடிச்சது. " என்றார்.

^ படத்தின் கருவே சொல்லி விட்டார். முடிஞ்சது சோலி.

விஷ்ணு விஷால், muneeskaanth மகளுக்கு ஒரு பரிசு அளிப்பார்.

அதைக் கையில் கொடுக்கும் போதே "keyboard குடுப்பாப்ள"

"அண்ணா, படம் பார்க்க விடுங்கணா. please" என்றேன்.

"நான் எதுவும் பேசல பா. நீயே பாரு."


ஒரு பெண்ணை கடத்த முயலும் பொழுது விஷ்ணு விஷாலின் மொத்த குழுவும் தூரத்தில் நின்று கண்காணிக்கும்.

"இது twins-உ. ஒரு பொண்ணு மாட்டிக்கும்.இன்னொன்னு s ஆயிடும். ஷார்ப்பு " என்று மிகவும் விறுவிறுப்பாக பார்க்கத் தொடங்கினார்.

விஷ்ணு விஷால் christopher வீட்டுக்குள் நுழைவார். ஏதும் கண்டு பிடிக்க இயலாது. எங்கு இருக்கக் கூடும் என்று யோசிக்கிறேன்.

"கீழ இருப்பான் அந்த பையன்" என்றார்.

அந்த பெண் ஒரு அறை வழியாக தப்பிக்க முயல்வார். அரங்கமே அந்தக் காட்சியில் இருக்கை நுனியில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கும்.

"இந்த பொண்ணு மாட்டிக்காது. easy-ஆ தப்பிச்சிரும்" என்றார்.

கொலை செய்வது பெண் அல்ல. ஆண் என்று வெளியாகும் காட்சியில் " நான் முதல்லியே சொன்னேன் ல. எப்புடி?" என்றார்.

காளி வெங்கட் துப்பாக்கி எடுத்து சுட முயல்வார்.

"டம்மி police. சுட மாட்டான்.  இவன் தான் செத்துபுடுவான்" என்றார்.

நிழல்கள் ரவி காப்பாற்ற முயல்வார். "டாக்டர் காலி" என்றார்.

இறுதிக் காட்சி -  விஷ்ணு விஷால், shutter பூட்டி இருப்பதைப் பார்ப்பார். அந்நேரம் வேறொருவர் அழைத்து ஏதோ சொல்ல  அங்கு இருந்து கிளம்ப முற்படுவார்.

"மேல இருந்து bubble முட்டை  வரும். அதை வச்சி கண்டுபுடிச்சுடுவான். அப்புறம் தான் fight. அப்புறம் climax". என்றார்

இப்படி, படம் முழுவதும் வர்ணனை செய்து வந்தார்.

படம் முடிந்தது.

எவ்வளவு நல்ல படம். எதுக்கு தேவை இல்லாம இவர் கிட்ட பேசினேன் என்று எண்ணி வருந்திக் தலையில் கை வைத்து கொண்டு இருந்தேன்..


"feelinga இருக்கா?  எப்படி, சொன்னேன் ல, director செமயா பண்ணி இருக்கான்ல? " என்றார்.

"அவர் பண்ணாரோ இல்லியோ ணா, நீ செமயா பண்ண ணா." என்று கண்ணில் நீர் ததும்ப கை குடுத்து கும்பிட்டுக் கிளம்பினேன்.


அன்று முதல் திரையரங்கம் சென்றால் அருகில் யாராவது அமர்ந்து "படம் போட்டு எவ்ளோ நேரம் ஆச்சு" என்று  கேட்டால் கூட " முஜ்கோ தமிழ் நஹி மாலும் சாஹிப்.மாப் கீஜியே" என்று கூறிக்கொண்டு வருகிறேன்.