Tuesday, May 15, 2018

இரவுக்கு ஆறு கண்கள்

இரவு பத்து மணி. ஒரு சந்திப்பை முடித்து விட்டு மிதிவண்டியில் வந்து கொண்டு இருக்கிறேன்.  சக்கர நெம்பகொலை(gear) மாற்றுகையில் ஆரங்கள் (spokes) இடம் பெயர்ந்து சிக்கிக் கொண்டன. முயன்று சரி செய்ய முயற்சித்தேன். நன்கு சிக்கி இருந்தன. சரி செய்ய இயலவில்லை. திருப்புளி தேவைப்பட்டது.

இல்லம், அங்கு இருந்து 4 தொலை அளவு அலகு(kilometer). மிதிவண்டியை நகர்த்த இயலவில்லை. அருகாமையில் இருந்த இரு சக்கர வாகனம் சீர் செய்யும் கடைக்கு சென்று திருப்புளி கேட்டேன். அரசின் வருவாய்க்கு பங்களித்து இருந்தார். பதில் ஏதும் கூறாமல் இல்லை என்பது போல் கையை அசைத்து கடையை மூடும் பணியில் தீவிரமாய் இருந்தார்.

சற்று தொலைவில் ஒரு கல்லெண்ணெய் நிலையம்.  திருப்புளி வினவினேன். இல்லை என்றும் எல்லாம் ஓர் அறையில் வைத்து பூட்டி விடுவோம் காலை தான் திறப்போம் என்றனர். 

பதில் ஏதும் பேசவில்லை.  மிதிவண்டியைத் தூக்கிக் கொண்டே  நடந்தேன். சற்று தொலைவில் பார வண்டி(Lorry) ஒன்று இருந்தது. அதில் இருவர் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.

திருப்புளி கிடைக்குமா என்று கேட்டேன். அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. தெலுங்கு பேசினர். என்ன ஆயிற்று  என்றனர். எனக்கு தெரிந்த தெலுங்கில்  வண்டியின் பிரச்சனையைக் கூறினேன். 

வண்டியில் இருந்து இறங்கி வந்து, அவர்கள் வண்டியின் முன் விளக்கைப் போட்டு என் மிதி வண்டியை சற்றே சிரமப்பட்டு ஒருவர் வண்டியைப் பிடிக்க, இன்னொருவர் பின் சக்கரத்தை தூக்கிப் பிடித்து திருப்புளி கொண்டு மாட்டி இருந்த ஆரங்களை விடுவித்து  சரி செய்தனர். அவர்களின் கைகள் எல்லாம் எண்ணெய்ப் பசை நன்கு படிந்து இருந்தது. நன்றி கூறி கிளம்பினேன்.   

சற்று தொலைவில் இருந்த கடையில் வாழைப்பழமும் சில மாச்சில்களும் வாங்கி வந்து அவர்களிடம் தந்தேன்.  அவர்கள் "எதற்கு இதெல்லாம். ஏற்கெனவே உண்டு விட்டோம்" என்று கூறினர்.  இந்த நேரத்தில் உதவி செய்ததற்கு மிக்க நன்றி, இல்லையேல் 4 தொலை அளவு அலகு என் மிதி வண்டியைத் தூக்கிக் கொண்டு தான் சென்று இருக்க வேண்டும்  என்று சொல்லி மீண்டும் கூறி கிளம்பினேன்.

வண்டியின் ஓட்டுநர் கீழே இறங்கி வந்து ஒரு மாங்காயும் ஒரு பப்பாளியும் தந்தார். "இது எங்க ஊரில் விளைந்தது.சுவையாக இருக்கும்." என்று கூறி என் பையில் திணித்தார். மறுத்தும் கேட்கவில்லை. கைகள் குலுக்கி நன்றி கூறி கிளம்பினேன்.

வேலை பளு, எட்டப்படாத இலக்குகள், விடுபட்ட வாய்ப்புகள் என்று காலை முதல் ஏதோ ஒரு சலனம் இருந்து கொண்டே இருந்தது. அந்தத் தருவாயில் ஏற்பட்ட அவதி, ஏதும் செய்ய இயலா ஒரு நிலை, இதற்கு இடையில், அவரின் பணியின் அலுப்புக்குப் பின் செய்த அந்த  உதவி, அவரின் இந்த செய்கை, அந்த புன்னகை - ஒரே நொடியில் அனைத்தையும் அலசி விட்டது.  மகிழ்ச்சியுடன் மிதி வண்டியை மிதித்து இல்லம் வந்து அடைந்தேன். 


இன்னமும் சின்ன சின்ன அன்பில் தான் வாழ்க்கை இருக்கிறது.