Wednesday, November 4, 2020

I know swimming da

ஓர் ஏரியின் கரை அருகில் நின்று கொண்டு  இருக்கிறேன். பேச்சு வாக்கில் என் அருகில் பேசிக் கொண்டு இருந்தவர், வேகமாக ஏரியில் விளையாட்டாக என்னைத் தள்ளி விடுகிறார்.  நீரில் மூழ்குகிறேன்.

"என்ன மாமா இப்படி ஆகி விட்டது?. சரி பத்திரமாக செல்லுங்கள்" என்று மகிழ்வுடன் கை அசைத்துவழி அனுப்புகையில் தான் முகம் பார்க்கிறேன். அவர் என் அக்காவின் மூத்த மகன்.

மெய் போன்ற அந்த கனவில் இருந்து விழிக்கிறேன். நேரம் பார்க்கிறேன். காலை 5 மணி. இந்த கனவு  நடப்பதற்கு சாத்தியங்கள் அதிகம் என்பதை உணர்ந்தேன். 

2 காரணங்கள்

1. எனக்கு நீச்சல் தெரியாது(அன்று)

2. இதை செய்யும் முழு ஆற்றலும் திறமையும் பிறப்பிலேயே என் அக்கா மகனுக்கு உண்டு என்ற அசாத்திய நம்பிக்கை.

உடனே இணையத்தில் தேடி, 6 மணிக்கு, அருகில் உள்ள நீச்சல் பயிற்சி நிலையம் சென்று சேர்ந்து விட்டேன்.

15 நாள்கள் பயிற்சியில்  ஓரளவு நீந்தக் கற்றுக் கொண்டு ஆயிற்று. ஆனால் ஒரே ஐயம்- அந்த நீச்சல் குலத்தின் ஆழம் 5 1/2 அடி மட்டுமே. அதனால் முழு நம்பிக்கை வரவில்லை.  அந்த பயிற்சியாளரிடம் கேட்ட பொழுது - "நீங்க நீந்துவதைத் தான் பார்க்கிறேனே. அருமையாக நீந்துகிறீர்கள். நீங்க எல்லாம் கடலிலேயே நீந்தலாம். அந்த அளவுக்கு தயாராகி விட்டீர்கள். ஊரில் கிணற்றில் எல்லாம் குதித்து பாருங்கள். சுலபமாக இருக்கும்" என்றார்.



^இதைப் போன்று என்னை நானே தோளில் தட்டிக் கொண்டு வந்து விட்டேன்.

சில ஆண்டுகளுக்கு முன், நண்பர் கார்த்தி நீச்சல் கற்றுக் கொண்ட பிறகு, ஏதேச்சையாக கடற்கரை செல்லலாம் என்று கூறி 

- "அந்த பெரிய அலை வருது பாரு. நீ அங்க விழுந்தா கூட உன்னை காப்பற்றி விடுவேன். ஏன்னா எனக்கு தான் இப்போ நீச்சல் தெரியுமே.. "

 " அங்க தெரியுது பாரு படகு. நீ அங்க விழுந்தா கூட உன்னை காப்பற்றி விடுவேன். ஏன்னா எனக்கு தான் இப்போ நீச்சல் தெரியுமே.. 


"சக்திமான், என்னைக் காப்பாற்று"- என்று குழந்தைகள் கத்தினால் சக்திமான் வந்து காப்பாற்றுவாறே அது போல -"நீச்சல் வீரர் கார்த்தி, என்னை காப்பாறுங்கள்" என்று கத்தினால் போதும் - உடனே வந்து காப்பாற்றி விடுவேன்.  " என்பது போல் எல்லாம் பேசி என்னை வெறுப்பேற்றி இருந்தார். 

அன்று முடிவு செய்தேன். நாம் நீச்சல் கற்றுக் கொண்டாலும் இது போல யாரையும் வெறுப்பேற்றக் கூடாது என்று.

சில நாள்கள் கழித்து, நண்பர் குபேந்திரன் ஊரான பெரியகுளம் சென்றேன்.

"கல்லாறு செல்வோம். அனால் ஆழம் அதிகம்.. கொஞ்சம் பார்த்து தான் இருக்க வேண்டும் என்று கூறினார்."

"Hey. I know swimming da" என்று கனவு கண்டது முதல் 5 1/2 அடி நீச்சல் குளத்தில் கற்றது வரை கூறிக் கொண்டே வந்தேன். 



அருமையான நீர் வீழ்ச்சி.  ஆழம் அதிகமாக இருந்தது. 

குபேந்திரன் : "முதலில் நான் குதித்து ஆழம் பார்த்து சொல்கிறேன். நீங்கள் பிறகு குதியுங்கள்" என்றார்

"Hey. I know swimming da" என்று கூறி குதித்தேன். ஆழம் கொஞ்சமா தான் இருக்கு. நீ குதி." என்று கூறி ஒரு பக்கமாக நீந்தி சென்றேன்.



நன்கு நீந்தி சென்று ஒரு பாறை  இருந்தது. அதன் மீது அமரலாம் என்று அப்பக்கம் நீந்தி சென்று அந்த பாறையைத் தொட்டால், அந்த பாறை முழுதும் பாசி படிந்து வழுக்கியது பிடிக்கவே இயலவில்லை .சற்று தூரத்தில் சில செடிகள் போல இருந்தன. அதைப் பிடிக்கலாம் என்று சென்றேன். அவை முட்செடிகள். "சத்திய சோதனை" என்று நினைத்துக் கொண்டேன்.

சரி திரும்ப வந்த இடத்திற்கே சென்று விடுவோம் என்று நீந்தி வருகிறேன். அதற்கு மேல் நீந்த முடியவில்லை. 

நான் இருந்த திசையின் எதிர் திசையில் குபேந்திரன் ஒரு பாறை மீது அமர்ந்து இருந்தார்.  "தம்பி, தம்பி" என்று தத்தளித்து கை அசைக்கிறேன்.

"சும்மா விளயாதீங்க. I know - You know swimming" என்கிறார். 

மேலே நான்கு பதின்ம வயதில் இருந்தவர்களில் ஒருவர் குதித்து என் அருகில் வந்தார்.

"அவர் சும்மா விளையாடறார். கிட்ட போனா அமுக்கிடுவார். போகாதே" என்று தடுக்கிறார் குபேந்திரன். 

"வாங்க ண்ணே .. கையப் பிடிங்க" என்று சொல்லி மீண்டும் அதே வழுக்குப் பாறை அருகில் அழைத்து செல்கிறார். 

'அந்த பக்கம் வேண்டாம்" என்று நான் சொல்ல வந்ததைக் கேட்காமல் "பயப்படாதீங்க.. நான் தான் இருக்கேன் ல" என்று  அதே வழுக்கு பாறையில் கை யைப் பிடிக்க முடியாமல் என்னை விட்டு விட்டு வேறொரு நபரை அழைத்தார். 

இன்னொருவர் நீந்தி வர கொஞ்சம் முழுக ஆரம்பித்து விட்டேன். அதற்குள் அந்த வேறு நபர் வந்து கையைப் பற்றி இழுத்து செல்கிறார்.

"உயிர் பிழைத்து விட்டோம்" என்று தெரிந்து உயிரைக் காப்பாற்றியவரின் முகத்தைப் பார்க்கலாம் என்று நீருக்குள்ளே இருந்து எட்டிப் பார்த்து மீண்டும் தலையை குனிந்து கொண்டேன். 

காரணம் - அந்த பையன் மேல் இருந்து குதிக்கும் பொழுது கட்டி இருந்த ஒரே துண்டும் காற்றில் பறந்து போய் விட்டது. தன் மானத்தையும் பொருட்படுத்தாமல் நம் உயிரைக் காப்பாற்றி உள்ளான் என்று எண்ணினாலும் தலை நிமிர முடியாத சூழல்.  

 பாறைக்கு அருகில் இழுத்து வந்து விட்டார். அமைதியாக பாறை மீது அமர்ந்தேன். "ஒன்னும் இல்லை ண்ணே.. காலை கொஞ்சம் மேல தூக்கி அடிச்சி இருந்தீங்கன்னா வந்துட்டு இருப்பீங்க" என்று "அப்படியே" எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தார். இன்னும் தலை நிமிர முடியாமல் தான் அமர்ந்து இருக்கிறேன். "நீந்தி வர முடியலைன்னு வருத்தப் பட்டு தலை குனிந்து அமர்ந்து இருக்கிறார் போல.." என்று அவர் நண்பர்களிடம் கூறினார். எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

"அந்த துண்டை தூக்கிப் போடுய்யா" என்று அப்படியே சாவகாசமாக நண்பர்களைக் கேட்டார். "அங்குட்டு வந்து வாங்கிக்கய்யா.. நல்லா காத்தோட்டாம வா.. இங்கனக்குள்ள யாரு இருக்கா?" என்று அதை விட சாவகாசமாக அவரது நண்பர்கள் நடந்து செல்ல, என் அருகில் நின்று கொண்டு - "வரேன்ண்ணே" என்றார். 

"நன்றி தம்பி" என்று  குனிந்து கொண்டே சொன்னேன்.

அருகில் அமர்ந்து இருந்த குபேந்திரன் - "நன்றியும் மன்னிப்பும் கண்ணைப் பார்த்து சொல்லணும் மாமா" என்று கண் சிமிட்டிக் கொண்டே.

முறைத்தேன்.


"புரியுது. உங்க திட்டம் புரிந்து விட்டது. ஆழம் குறைவா இருக்குன்னு வருத்தப் படுறீங்க... அப்படியே மேல நடந்து போனால் 50 அடி ஆழத்துல நீந்தலாம் யாரும் இருக்க மாட்டங்க- ஏன்னா - you know swimming ல?" என்றார்.