Saturday, October 5, 2019

உண்மையான ராட்சசன் யார்?

ராட்சசன் - ஒரு பெரிய வெற்றிப் படம். அதில் ஐயம் ஏதும் இல்லை. அனால், யார் உண்மையான ராட்சசன்?




படம் வெளியாகி ஒரு வாரம் ஆகி இருந்தது. இரவுக் காட்சி, ரோகினி திரையரங்கம்.

எப்பொழுதுமே படம் துவங்குவதற்கு 5 நிமிடம் முன்பாகவே சென்று அமர்ந்து விடுவது வழக்கம்.

என் அருகில் ஒருவர் அமர்ந்து இருந்தார். அலைகளும் என் வாயும் ஒன்று என்பதால் அன்றும் ஓயவில்லை. அருகில் அமர்ந்தவரிடம் பேசுவோமே என்று "படம் செமையா இருக்காம் தல.  முண்டாசுப்பட்டி படத்தோட  director." என்று கூறினேன்.

"அவர் கேட்டாரா?" என்று நீங்கள் கேட்கலாம். கேட்கவில்லை தான். ஆனாலும் நான் அது போல பேசாமல் இருந்து இருந்தால் தான் ஆச்சர்யம்.


அருகில் இருந்தவர் :  "ஆமாம் பா. படம் ரொம்பவே நல்லா இருக்கு. அஞ்சாவது நாளா தொடர்ந்து night show வந்துன்னு இருக்கேன்.  8 மணிக்கு  போயி சரக்கு வாங்கி வீட்ல வச்சிடுவேன்.நேரா இந்த படத்துக்கு வந்துடுறது.   பயமா இருக்குமா. அந்த பயத்துலயே நேரா வீட்டுக்கு போயி குடிச்சிட்டு படுத்துகிறது. சும்மா குடிக்கக் கூடாது ல? ஏதாவது காரணம் இருக்கணும் ல? director mass பண்ணி இருக்கார்" என்றார்

"அருமை ணா. இந்த மாதிரி படம் எல்லாம் ஜெயிச்சா தான் நல்ல படம் நெறைய வரும்" என்றேன்.

அதற்குள் அவர் அருகில் அமர்ந்து இருந்த அவர் நண்பருடன் பேச ஆரம்பித்தார்.


முதல் காட்சி ஆரம்பித்தது.

இருவர் ஓடி வரும் காட்சி. நாய் குரைக்கிறது.

அண்ணன் அன்புடன் தோளைத் தட்டி,  "அந்த பின்னாடி இருக்கிற cement block-ல ஒரு body இருக்கும் பாரேன்" என்றார்.


"சரி ணா.. சரி ணா. நான் பார்த்துகிறேன்" - என்றேன்.

"இல்லை, நீ அதப் பார்த்து பயந்துடக் கூடாது ல?" என்றார்


விஷ்ணு விஷால் தயாரிப்பாளரிடம் கதை சொல்லிக் கொண்டு இருப்பார்.

"இப்போ ஒத்துக்க மாட்டாங்க. அப்புறம் , police ஆகி அந்த case-ஐயே கதையா எடுப்பாப்ல. climax-ல director ஆயிடுவார்" என்று தலை அசைத்துக் கொண்டே கூறினார்.

காவல் நிலையக் காட்சி வந்தது. "இந்த  பொம்பள பஜாரி மாறி பேசுவா. கடைசியா ஒரு scene-ல இவள பூட்டிட்டு ஓடிடுவான்." என்றார்.

கொஞ்சம் ஒரு 40 கோணம் அவருக்கு எதிர் புறமாக உடலை சாய்த்து அவரை விட்டு விலக முயன்றேன்.

"பாட்டு வரும் பாரு தேவை இல்லாத." என்றார்.

முனீஸ்காந்தின் மகள், விஷ்ணு விஷால் உடன் பேசிக்கொண்டு இருக்கும் முதல் காட்சி.

அப்போது, காது அருகில் வந்து "இந்த பொண்ணு கூட செத்துரும். பாவம். காப்பத்த try பண்ணுவாங்க. முடியாது" என்று உச்சு கொட்டி முடித்தார்.

ஒரு மாதிரி அவரைப் பார்த்தேன்.


இடைவேளையில் வேறு எங்காவது இருக்கை காலியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்.

தோளைத் தட்டினார் அண்ணன் -  "இந்தா பா. tea. உனக்கும் சேர்த்து வாங்கினு வந்தேன்"  என்று தேனீர் வாங்கி வந்து தந்தார்.. But, அந்த tea எனக்கு புடிச்சி இருந்தது.

முதன் முதலில், அரங்கில்  மந்திரம் செய்யும் காட்சி ஏதோ பின்னூட்டத்தில் வருகிறது.

"இந்த சனியன் தான் எல்லாரயும் சாவடிக்கும்.  ஆனா, அது பொம்பளையே இல்லை. பையன். செனியன் புடிச்சது. " என்றார்.

^ படத்தின் கருவே சொல்லி விட்டார். முடிஞ்சது சோலி.

விஷ்ணு விஷால், muneeskaanth மகளுக்கு ஒரு பரிசு அளிப்பார்.

அதைக் கையில் கொடுக்கும் போதே "keyboard குடுப்பாப்ள"

"அண்ணா, படம் பார்க்க விடுங்கணா. please" என்றேன்.

"நான் எதுவும் பேசல பா. நீயே பாரு."


ஒரு பெண்ணை கடத்த முயலும் பொழுது விஷ்ணு விஷாலின் மொத்த குழுவும் தூரத்தில் நின்று கண்காணிக்கும்.

"இது twins-உ. ஒரு பொண்ணு மாட்டிக்கும்.இன்னொன்னு s ஆயிடும். ஷார்ப்பு " என்று மிகவும் விறுவிறுப்பாக பார்க்கத் தொடங்கினார்.

விஷ்ணு விஷால் christopher வீட்டுக்குள் நுழைவார். ஏதும் கண்டு பிடிக்க இயலாது. எங்கு இருக்கக் கூடும் என்று யோசிக்கிறேன்.

"கீழ இருப்பான் அந்த பையன்" என்றார்.

அந்த பெண் ஒரு அறை வழியாக தப்பிக்க முயல்வார். அரங்கமே அந்தக் காட்சியில் இருக்கை நுனியில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கும்.

"இந்த பொண்ணு மாட்டிக்காது. easy-ஆ தப்பிச்சிரும்" என்றார்.

கொலை செய்வது பெண் அல்ல. ஆண் என்று வெளியாகும் காட்சியில் " நான் முதல்லியே சொன்னேன் ல. எப்புடி?" என்றார்.

காளி வெங்கட் துப்பாக்கி எடுத்து சுட முயல்வார்.

"டம்மி police. சுட மாட்டான்.  இவன் தான் செத்துபுடுவான்" என்றார்.

நிழல்கள் ரவி காப்பாற்ற முயல்வார். "டாக்டர் காலி" என்றார்.

இறுதிக் காட்சி -  விஷ்ணு விஷால், shutter பூட்டி இருப்பதைப் பார்ப்பார். அந்நேரம் வேறொருவர் அழைத்து ஏதோ சொல்ல  அங்கு இருந்து கிளம்ப முற்படுவார்.

"மேல இருந்து bubble முட்டை  வரும். அதை வச்சி கண்டுபுடிச்சுடுவான். அப்புறம் தான் fight. அப்புறம் climax". என்றார்

இப்படி, படம் முழுவதும் வர்ணனை செய்து வந்தார்.

படம் முடிந்தது.

எவ்வளவு நல்ல படம். எதுக்கு தேவை இல்லாம இவர் கிட்ட பேசினேன் என்று எண்ணி வருந்திக் தலையில் கை வைத்து கொண்டு இருந்தேன்..


"feelinga இருக்கா?  எப்படி, சொன்னேன் ல, director செமயா பண்ணி இருக்கான்ல? " என்றார்.

"அவர் பண்ணாரோ இல்லியோ ணா, நீ செமயா பண்ண ணா." என்று கண்ணில் நீர் ததும்ப கை குடுத்து கும்பிட்டுக் கிளம்பினேன்.


அன்று முதல் திரையரங்கம் சென்றால் அருகில் யாராவது அமர்ந்து "படம் போட்டு எவ்ளோ நேரம் ஆச்சு" என்று  கேட்டால் கூட " முஜ்கோ தமிழ் நஹி மாலும் சாஹிப்.மாப் கீஜியே" என்று கூறிக்கொண்டு வருகிறேன்.