Wednesday, June 6, 2018

மது புட்டி வாங்க வேண்டும் - குறும்பட நினைவுகள்

"காதல் எனும் முடிவிலியில்" கதாநாயகன் மது அருந்துவது போல ஒரு காட்சி. பொதுவாக, படப்பிடிப்புக்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே தேவையான அனைத்தையும் வாங்கி விடுவது வழக்கம். இந்த முறை, மது புட்டி வாங்க வேண்டும் என்பதை மறந்து விட்டோம்.

அந்த காட்சியை படம் பிடிக்கத் துவங்கும் பொழுது மாலை 7 மணி. அப்பொழுது தான் நினைவு வருகிறது - மது புட்டி வாங்க மறந்து விட்டோம் என்று.  நான், இயக்குனர் கார்த்திக், தயாரிப்பாளர் அருண், ஆவுடை நால்வரும் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம்.

நால்வரும் படி தாண்டா பத்தினிகள். மதுபானக்கடை வாசற்படியை மிதித்தலை பாவம் என்று எண்ணுபவர்கள் :)

யார் சென்று வாங்குவது? என்ன வாங்குவது? அதை வாங்கிய பின் மீண்டும் விற்க இயலுமா? என்ற கேள்விகள்.

அருண், ஏதோ யோசித்தவராய் "நான் செல்கிறேன்" என்றார்.

10 நிமிடங்களில் வந்து விட்டார். திரும்ப வருகையில், கையில் புட்டியுடன் வந்தார். மொத்தம் ரூ.250 ஆயிற்று என்றார்.


படப்பிடிப்பு முடிந்தது.  அந்த மூடியை திறந்து காட்டி, மொத்தம் "௨௫௦ ரூபாய் எல்லாம் இல்லை. ரூ.1 தான்" என்று சிரித்துக் கொண்டே கூறினார். நேரே காயிலான் கடை சென்று மது புட்டியின் விலையைக் கேட்டு உள்ளார். ரூ.1 என்று கூறிய உடன், அதில் நீரை நிரப்பி, ஒரு மூடியை எடுத்து அழுத்தி விட்டு எடுத்து வந்து விட்டார்.

பார்க்கவும் அந்த புட்டி சற்று அழகாகவே இருந்தது.



அன்று முதல் தான் "குறும்படத் தயாரிப்பாளர் திலகம்" என்று அருண் குமார் அனைவராலும் அன்போடு அழைக்கப் பெற்றார்.






Tuesday, June 5, 2018

ஒரு கோப்பைத் தேநீர் - குறும்பட நினைவுகள்

குறும்பட நினைவுகள்

எம் குழுவினர் எடுத்த சில குறும்படங்களின் சில காட்சிகளைக் காண்கையில் ஒரு சில காட்சிகளைப் படமாக்கிய விதம், ஓர் இனிய அனுபவமாய் நினைவில் இருக்கும்.

எமது நான்காம் படமான "காதல் எனும் முடிவிலியில்" பார்த்துக் கொண்டு இருக்கையில் ஒரு காட்சி.

கதாநாயகன் தேநீர் அருந்தும் காட்சி. 

ஒரு முகப்பில் இருந்து அந்த காட்சியை எடுக்க வேண்டும்.

ஒளிப்பதிவாளர் விமல், எந்த ஒரு காட்சியையும் கச்சிதமாக எடுக்க முற்படுபவர்.



கோப்பையில் தேநீரின் புகை தெரிய வேண்டும். அப்பொழுது தான் தத்ரூபமாக இருக்கும் என்று கூறி விட்டார்.


சமையல் அறையில் நீரை கொதிக்க வைத்து, கொண்டு வந்து ஊற்றினோம். புகை, கருவியில் தெரியவில்லை.

நண்பர் அருண், மிக அதிகமாக நீரை சூடேற்றி ஊற்றினார். அப்பொழுதும் புகை தெரியவில்லை.

நீர் சூடேற்றும் கருவியை முகப்புக்கு அருகில் வைத்து விட்டு,  நன்கு சூடேற்றி ஊற்றினார். அப்பொழுதும் தெரியவில்லை.


வேறு சில முயற்சிகளும் கை கொடுக்கவில்லை. நேரே பூசை அறை சென்றார். சாம்பிராணி எடுத்து வந்து கொளுத்தி விட்டார்.

கோப்பையை துடைத்து விட்டு, சாம்பிராணியை அதில் போட்டு விட்டார்.  "மூச்சை பிடித்துக் கொண்டு குடிப்பது போல் நடித்து விடு" என்று கிர்திக்கிடம் கூறினார். 

புகையைப் படம் பிடித்து ஆயிற்று.  அவ்வளவே! :)

அந்த காட்சி