Friday, July 17, 2020

பெயர் சொல்லும் பிள்ளை

இப்பொழுது எல்லாம் விதம் விதமாக குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப் பார்க்கிறோம்.

நான் கேட்ட, கேள்விப்பட்ட சில பெயர்களையும் அவற்றின் காரணங்களையும் எடுத்து உரைக்கிறேன்.

நன்றி மறவாமை:

நண்பரின் பெயர் மார்ஷல். ஏன் இந்த பெயர் என்றால் அவருடைய அப்பாவின் முதல் முதலாளியின் பெயர். இவருக்கு பொருள் உதவி எல்லாம் செய்து, வழிகாட்டி, கடன் தந்து முன்னேற்றம் அடைய உதவி உள்ளார். நல்லது.


இதற்கு இன்னொரு நண்பர் கேட்டார் - "நல்ல வேலை. உங்க அப்பா வங்கியிலோ / நிதி நிறுவனத்திலோ கடன் பெற்று உன்னை வளர்த்து இருந்தால், "கனரா வங்கி, வெங்கடாசலம் பைனான்சு கம்பனி என்று உனக்கு பெயர் வைத்து இருப்பாரோ" .


பொறாமை தவறு

நண்பரின் மகள் பெயர் பத்மஸ்ரீ. ஏன் இந்த பெயர் என்று கேட்டேன்.
"எல்லாம் இந்த கமல் மேல் இருக்கும் பொறமை தான்" என்றார். "எந்த கமல்?" என்றேன். "நடிகர் கமல் தான். எதற்கு எடுத்தாலும் பத்மஸ்ரீ கமல்ஹாசன், பத்மஸ்ரீ கமல்ஹாசன் என்று சொல்கிறார்கள். இப்பொழுது, பள்ளியில் என் மகளை "சஞ்சய் ராமசாமி " என்பது போல என் பெயரை சேர்த்தால் - "பத்மஸ்ரீ சண்முக சுந்தரம்" என்று அழைக்க வேண்டும். அப்படி அழைக்கப்படும் பொழுது நான் அந்த விருதைப் பெற்றது போலவே உணர்கிறேன் என்றார். "நான் உன்னிடம் பேசுவது சேது படம் இறுதிக் காட்சி பார்ப்பது போலவே உள்ளது" என்று கூறி விடை பெற்றேன்.


பிரேமம்

"எனக்கு ஏன் பா ஹரிணி-ன்னு பேர் வச்சீங்க"- என்று கண்ணீர் விட்டு கேட்ட "பாய்ஸ்" ஜெனிலியா நமக்கு பழக்கப்பட்டது தான்.
ஆனால் அதிலும் ஒரு புது முயற்சி. நண்பனின் மகன் பெயர் - "ஸ்ரீ செல்வ முத்து குமரன்".


2 காரணங்கள் சொன்னார்

1. சோதிடர்கள் கண்டிப்பாக 4 பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறி விட்டனராம்.

2. எல்லா பழைய காதலிகள் பெயரையும் இணைத்து வைத்த பெயர்.

பள்ளி - ஸ்ரீ திவ்யா
கல்லூரி(முதல் இரண்டு ஆண்டுகள்) - தமிழ்செல்வி
கல்லூரி(அடுத்த இரண்டு ஆண்டுகள்) - முத்தழகு
பணியிடம் - நிவேதா

"முதல் மூன்றும் சரி. நிவேதாவுக்கு பதில் ஏன் "குமரன்" என்று வைத்தாய்" என்று கேட்டேன்.

அந்த முதல் மூன்று பெண்களும் என்னை நிராகரித்து விட்டனர். நிவேதா என் காதலை ஏற்றுக் கொண்டார். ஆனால், அவர் தந்தை அதை மறுத்து விட்டார். அதன் காரணமாக தான் அவர் தந்தை பெயர் -"குமரன்". அதை சேர்த்துக் கொண்டேன். என் மகன் மீது கோபம் வரும் பொழுது எல்லாம் "குமரன்" என்று அழைத்து திட்டி மகிழ்வேன் என்றார்.  இன்னும் சில விடுபட்ட பெயர்களை அடுத்த குழந்தைக்கு வைக்க திட்டமிட்டு உள்ளார்.

தலைவா


தலைவர்கள் பெயரை சூட்டுதல்

தயவு செய்து இந்த பெயர்களைத் எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கவும்.
o   விவேகானந்தன்.
o   இந்திரா காந்தி  
o   ஜவஹர்லால் நேரு   
o   கட்டபொம்மன் ('மஜா' படத்திலேயே இதற்கான காரணம் தெளிவாக உண்டு)

   குழந்தைகள் தன் தவறுக்கு/ சேட்டைக்கு அடியோ திட்டோ வாங்குவது மட்டும் அல்லாமல் பெயருக்கு இரண்டு / மூன்று அடி சேர்த்து விழும். பிள்ளைகள் நலன் கருதி அவ்வாறு செய்யது இருத்தல் நலம்.


·        தொட்டில் பழக்கம்

·       நண்பர் ஒருவர். "அறம்" என்ற சொல்லுக்கு பொருள் அவர் என்பது போன்ற வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர். அவருக்கு ஒரே ஒரு கெட்ட பழக்கம். தமிழில் "ஓ" என்று துவங்கும் கெட்ட சொல்லை உயிர்வளியை(ஆக்சிஜென்) போல பயன்படுத்துவார். அவரை அனைவரும் "ஓ__" கிஷோர் என்று அன்புடன் அழைப்பர்.



·      "இப்படி இந்த சொல்லை பயன்படுத்துகிறாயே. நாளை உன் குழந்தை உன்னை பார்த்து இந்த சொல்லை பயன்படுத்தாதா? " என்று கேட்டதற்கு.."எனக்கு சற்று கடினமாக தான் உள்ளது. ஆனால், அந்த சொல்லை பயன்படுத்தாமல் பேசினால் ஏதோ இலக்கணப் பிழையுடன் பேசியது போலவே உள்ளது. ஒரு நிறைவாகவே இல்லை. நான் அதற்கு ஒரு பெரிய திட்டம் வகுத்து உள்ளேன். குழந்தையின் பெயரே "ஓ__" என்று வைத்து விடுவது. பள்ளி ஆசிரியர் முதல் தலைமை ஆசிரியர் வரை அதை சொல்லி அழைக்கும் பொழுது அது இயல்பாகி விடும்." என்றார். பிறகு நான் மட்டும் அந்த சொல் பயன்படுத்துவது தவறு என்றாகி விடாது அல்லவா?" என்றார்.


சிவனும் சக்தியும்


புதுமை - தாயின் முதல் எழுத்து + தந்தையின் முதல் எழுத்து.

நண்பர் பெயர் - ராகேஷ். அவரின் மனைவி பெயர் : தீபா.

அவரின் குழந்தை பெயர் : தீரா - இது மட்டும் அன்றி பள்ளியில் முதலெழுத்து குறியுடன்(initials) சேர்த்து பெயர் பதிவு செய்யும் பொழுது 
தீ.ரா. தீரா. 

"எப்படி என் பொண்ணு பெயர்? ஒவ்வொரு முறை சொல்லும் பொழுதும் எதிரொலிக்கிறது பார்த்தாயா? நாளை உலகம் முழுதும் எதிரொலிக்கும்" என்றார். ஆங்கிலத்திலும் D.R. என்று துவங்கும். மருத்துவர் ஆவதற்கு முன்பே. "Dr". நாளை என் மகள் மருத்துவர் ஆனால் ஆங்கிலத்திலும் எதிரொலிக்கும். 
"Dr.D.R.". 

எப்படி ?" என்றார்.  


சரி நண்பா.. ஒரு வேளை, உன் பெயர் சந்திரன் என்று இருந்து, மனைவி பெயர் - நிவேதா என்று இருந்து இருந்தால் - "சனி" என்று வைத்து இருப்பாயா? " என்று கேட்ட பொழுது , பதில் அளிக்காமல் facebook திறந்து என் நட்பை ரத்து செய்து விட்டு கிளம்பினார்.


நல்ல தமிழில் பெயர் வைக்க : peyar.in