Wednesday, April 5, 2017

போதையில் புத்தி மாறுமா?

சில நாள்களுக்கு முன் நடந்த சம்பவம்.

நண்பரின் தந்தை, அவர் வீட்டில் இருந்து  அருகில் இருக்கும் இன்னொரு நண்பரின் இல்ல நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டி இருந்தது.

இரு சக்கர வாகனத்தில் அவரால் அமர முடியாத காரணத்தால், மூன்று சக்கர வாகனம் ஒன்றை அழைக்க சென்றேன்.

மிக அருகில் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் யாருமே வர முன் வரவில்லை.

ஒரே ஒருவர், "நான் வர்றேன்" என்றார். அவர், மது அருந்தி இருந்தது நன்றாகவே தெரிந்தது. ஓரளவு நல்ல போதை. ஆனால், வேறு வழி இல்லை.  சற்று நிதானமாகவே ஓட்டினார்.

"எவ்வளவு?" என்று 2-3 முறை கேட்டேன்.

"நீ குடுக்கிறதை குடு" என்று சொல்லி என்னை பின் தொடர ஆரம்பித்தார்.

நண்பரின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி விட்டு, நண்பரின் தந்தையை அழைக்க சென்றேன்.

உடல் நலம் காரணமாக நண்பரின் தந்தை கிளம்பி வர சற்று தாமதம் ஆகும் என்று நான் யூகித்தேன். மூன்று சக்கர வாகன ஓட்டுனரிடம் "வர சற்று தாமதம் ஆகும். காத்திருப்புக்கு  தனியே பணம் தருகிறேன். தயவு செய்து காத்திருக்கவும்." என்றேன். சரி என்று தலை ஆட்டினார்.


நண்பரின் தந்தையை அழைக்க சென்றேன்.  15 நிமிடங்கள் ஆனது. அடிக்கடி வெளியே எட்டி பார்த்தேன்.  அவர் அங்கேயே காத்திருந்தார்.

நண்பரின் தந்தையை வண்டியில் ஏற்றி விட்டேன். அவர் பணப்பையை எடுத்து வர மறந்து விட்டார். அவர் கையில் - ₹20 தாள் 
ஒன்றும் , ₹50 தாள் ஒன்றும் தந்தேன்.

நண்பரின் தந்தை காதில் சொன்னேன்  - "முதலில் ₹50 தாங்க. பிரச்சினை பண்ணா, இந்த  ₹20 கொடுத்து விடுங்கள்." என்று சொன்னேன். அந்த வாகனம் கிளம்பியது.பொறுமையாக ஒட்டி செல்ல சென்றேன். சரி என்று தலை அசைத்து கிளம்பினார்.

எனக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. பேசிக்கொண்டு இருந்தேன். பின்பு, அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். 

அந்த மூன்று சக்கர வாகனம் எதிரில் வந்தது. அந்த ஓட்டுநர் என்னை பார்த்து  "பத்திரமா விட்டுட்டேன் பா". என்றார். "நன்றி" என்று கூறி சென்று விட்டேன்.

நண்பரின் தந்தையிடம் சென்று "எந்த பிரச்சனையும் பண்ணாம காசு வாங்கிகிட்டு போயிட்டாரா ?" என்றேன்.

நண்பரின் தந்தை சொன்னார் - "நீ சொன்ன மாதிரி , முதலில் ₹50 தான் குடுத்தேன். அவன் திரும்பி பார்த்தான். எதுக்கு வம்புனு ₹20 தாளையும்  குடுத்தேன்." 

அந்த ஓட்டுநர் -  "போதையில வேற இருக்கேன். வயசானங்கவ-னு சொன்னார். அந்த கொறஞ்ச தூரத்துக்கு எவனும் ஸ்டாண்ட்ல வர மாட்டான். அதான் வந்தேன். ₹20 போதுங்க." என்று கூறி ₹50 தாளை திரும்ப தந்து விட்டு கிளம்பி விட்டாராம்.

இமான் அண்ணாச்சியின் நகைச்சுவை ஒன்று தான் நினைவுக்கு வருகிறது  - "குடிகாரன் எல்லாம் குழந்தை மாதிரி".

இந்த பதிவு, குடிப்பழக்கத்தையும் மது அருந்துபவர்களையும். எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை. எதிர் பாராத நபரிடம் இருந்து வந்த எதிர் பாராத நல்ல செய்கை. அதை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

2 comments:

  1. May be he drunk jack Daniels

    ReplyDelete
  2. ��������������������

    ReplyDelete