Friday, April 7, 2017

தெய்வமும் குழந்தையும்

என் அக்கனின் இளைய மகன் - வைபவ் கார்த்திகேயன்.
(^ அண்ணன் = அண்ணா ; அக்கன் = அக்கா )

முதல் முறை, தொட்டிலில் இருந்து நான் தூக்கியது முதல் இன்று வரை, என் அக்கனிடம் கூட செல்லாமல் காலை முதல் இரவு வரை, கரம் பிடித்தோ, கட்டி அணைத்தபடியோ மட்டுமே இருப்பான்.

கிட்டத்தட்ட, ஓராண்டுக்கு முன், (4 வயது இருக்கும் அவனுக்கு அப்பொழுது).

இரவு நேரம். அவனைத் தட்டி உறங்க வைத்து விட்டு, சிலவற்றை யோசிக்கிறேன். தொழிலில் சின்னதாய் ஒரு சறுக்கல், தேக்க நிலை, சில இழப்புகள்.ஆழ்ந்த மனக்கேதம்.  திரும்பி இவனை பார்க்கிறேன். விழித்து இருக்கிறான். என்னை பார்த்த உடன், ஒரு கையை ஊன்றி, தூக்கக் கலக்கத்தில் எழுந்து என்னை உற்றுப்  பார்க்கிறான்.

வைபவ் :  மாமா, ஏன் ஷோகமா(ச = அவர் மொழியில்  ஷ) இருக்கீங்க ?

நான் : ஒன்னும் இல்லை டி! நீ தூங்கு.

வைபவ் : இல்ல, நீங்க ஷோகமா தான் இருக்கீங்க.

துக்கம்,  புன்னகைக்கு  இடம் தரவில்லை.

தன் கையை எடுத்து "கொஞ்சம் இருங்க" என்று கூறி

முகம் கழுவிய உடன் முகம் துடைப்பது போல், அவன் கையை எடுத்து மேலிருந்து கீழாக என் முகம் துடைத்தான்.

"இப்போ ஷோகம் போயிடுச்சா ?" என்றான்.

அவன் செய்கையைக் கண்டு லேசாக  ஓர வாயில் புன்னகைத்தேன்.

"ஹும். இங்க இன்னும் கொஞ்சம் ஷோகம் இருக்கு" என்று கூறி மறு கன்னத்தையும்  சற்று அழுத்தமாய் அழுத்தித் துடைத்தான்.

அவன் அன்பு, செய்கை, அதன் உன்னதம், அந்த அறியாமை எல்லாம் கண்டு முழுதாய் சிரித்தேன். "இப்போ பாருங்க ஃபுல்லா ஷோகம் போயிடுச்சு".  என்று சொன்னான். கட்டி அணைத்தேன். வழக்கம் போல் முத்தமிட்டான்.

வைரமுத்து அவர்களின் வரி தான் நினைவுக்கு வந்தது  - "அட பாசம் மட்டும் போதும் கண்ணே! காசு பணம் என்னத்துக்கு ?" என்ற எண்ணம். நிம்மதியாய் உறங்கினேன்.

"இறைவனை நேசியுங்கள். அவர் தம் கரங்களால் உங்கள் துயரங்களைத் துடைத்திடுவார்"  என்று ஒரு சுவற்றில் படித்த நினைவு.



அன்பிற்கினிய வைபி,

நாளை நீ வளர்ந்து, இந்தப் பதிவைப் படித்து, புரியும் தருவாயில், என் துயரை நீக்கியதற்கு, உன்னை காற்று உட்புகா வண்ணம்  நான் கட்டியணைத்து  நூறு முத்தங்கள் இடுவதாய்  நினைத்துக் கொள். காவிக்கண்டுகள் (chocolate) முதல் முத்தங்கள் வரை என் கருமித்தனத்தை நீ பொறுத்தருள்வாயாக!

6 comments:

  1. நெகிழ்ச்சி

    ReplyDelete
  2. You shared this incident with me a while ago. I still remember!! A kind gesture from our loved ones is all what we need!!

    ReplyDelete
  3. You shared this incident with me a while ago. I still remember!! A kind gesture from our loved ones is all what we need!!

    ReplyDelete
  4. Short and sweet moments of life...

    ReplyDelete